Thursday, July 06, 2006

முஸ்லிம் பெண்ணை கற்பழித்து கொலை செய்த அமெரிக்கர்!

ஈராக்கில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த அமெரிக்க வீரர்
வாஷிங்டன்,ஜுலை.6-

அமெரிக்காவில் பணியாற்றி புகார் காரணமாக வெளியேற்றப்பட்டவர் ஸ்டீவன் கிரீன்.இவர் ஈராக்கில் பணியாற்றியபோது ஈராக்கியப் பெண்ணை ரோட்டில் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அந்தப் பெண்ணின் பெற்றோரையும் மகளையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பிறகு அந்தப் பெண்ணை கற்பழித்தார். பிறகு அந்தப்பெண்ணையும் சுட்டுக்கொன்றார்.

இது ஈராக்கில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டு நிருபனமானால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும்.

Tuesday, May 16, 2006

பத்திரிக்கைகள் படுத்தும் பாடு!

பத்திரிக்கைகள் படுத்தும் பாடு!
நமது நாடுகளில் இருக்கக்கூடிய பத்திரிக்கைகள் எந்த அளவிற்கு உண்மைகளை எழுதுகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு சந்தேகமே. மிகச் சில நேரங்களை தவிர பெரும்பாலான நேரங்களில் ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்தவர்களாகத்தான் தங்களுடைய செய்தியை பத்திரிக்கைகளில் உலவ விடுகிறார்கள். அது உண்மையா, பொய்யா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை எவ்வளவு தந்திரமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியுமோ அதை நேர்த்தியாக செய்வதில் பெரும்பாலான பத்திரிக்கைகள் வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களுக்கு சரியான செய்திகளை எடுத்துச் சொல்லி மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்யும் நோக்கம் இந்த பத்திரிக்கைகளுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஏதேனும் ஒரு ஆதரவு நிலையோடு செய்தி தரும் பத்திரிக்கைகள் வெவ்வேறு /எதிர்மறையான செய்திகளை ஒரே நேரத்தில்/விசயத்தில் பரப்புகிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நிலவும் அமைதி கூட சில நேரங்களில் கேள்விக்குறியாகி விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு..
கடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்ற ஆய்வில்(!) இறங்கிய ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டரின் செய்திகளை படிப்பவர்கள் சற்று குலம்பித்தான் போவார்கள். இந்த இரண்டு பத்திரிக்கையின் செய்திகளும் ஒரே விசயத்தில் வெவ்வேறு /எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதை படிப்பவர்கள் உணர்ந்து இந்த பத்திரிக்கைகளின் தரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
'கருணாநிதி சுமார் 8 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார். உடனே சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் சுரேஷ;குமாரை அழைத்து 'என்னப்பா வித்தியாசம் குறைந்து விட்டதே?' என்றாராம். அதற்கு சுரேஷ;குமார் 'தலைவரே முஸ்லிம்கள் இன உணர்வு காரணமாக நமக்கு ஓட்டுப்போடவில்லை. தாவூத் மியாகானுக்குப் போட்டுவிட்டார்கள். அதுதான் நமக்கு ஓட்டுக் குறையக் காரணம்' என்றாராம். அதைக் கேட்ட கருணாநிதி கொஞ்சம் அப்செட்தான்! சேப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க-வினரோ 'தாவூத் மியாகான் வாழைப்பழ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்த போதே எதிர்த்தோம். அவர் மட்டும் இரட்டை இலை சின்னத்தில் நின்றிருந்தால் நிச்சயமாக கருணாநிதிக்குக் கடும் போட்டியாக இருந்திருப்பார். அவரது பிடிவாதம்தான் தோல்விக்கு காரணம்' என்கிறார்கள்.'
'அட!
'கருணாநிதியின் வாக்கிங் தோழர் நாகநாதன் திருவல்லிக்கேணியில் சுமார் 2800 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சயீத்திடம் தோற்றுப் போய்விட்டார். பார்த்தசாரதி கோயிலைச் சுற்றியுள்ள ஏரியாவில் சுமார் இரண்டாயிரம் ஓட்டுக்கள் இரட்டை இலைக்குக் கூடுதலாகக் கிடைத்ததுதான் அவரது வெற்றியை உறுதி செய்திருக்கிறது. மறைந்த தாதா வீரமணி ஏரியாவான அயோத்திக்குப்பம் உள்ளிட்ட மீனவர் பகுதிகளில் தி.மு.க-வுக்கு ஓட்டுக்கள் குறைவாகக் கிடைத்திருக்கின்றன. தேர்தல் முடிவு வெளியானதும், திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. பிரமுகர்களை அழைத்து விசாரித்திருக்கிறார் கருணாநிதி. 'முஸ்லிம்கள் அந்த அம்மாவுக்குதான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பிராமணர், மீனவர்களின் ஓட்டுக்களும் அவர்களுக்கு விழுந்ததால் தோற்றுவிட்டோம் என்றார்களாம்.
முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் சிலவற்றை அ.தி.மு.க இழுத்திருந்தாலும் அம்மத மக்கள் பெரும்பாலும் தி.மு.க.வுக்கே ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். இதில் உளவுத்துறையினர் வேறு இடையில் புகுந்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஜமாத்திலும் செய்த வேலை எதிர்ப்பாக மாறியது. 'அனைத்து முஸ்லிம் ஜமாத் உரிமை பாதுகாப்புக் குழு' தேர்தல் ஆணையம் வரை இதை எடுத்துச் சென்றது.

Tuesday, May 09, 2006

ஜெயிக்கப்போவது யாரு?

நற்குணங்களால் ஜெயிக்கப்போவது யாரு?

அரசியல் கட்சிகளின் வண்ணமயமான வாக்குறுதிகளோடு தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நல்லபடியாக முடிந்திருக்கிறது.

கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஹை-லைட்டாக பேசப்படுவது கலர் டிவி, தேவைப்பட்டால் இலவச கேபிள் இணைப்பு.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஹை-லைட்டாக பேசப்படுவது பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், தாலிக்கு தங்கம்.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி கேட்கும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தேர்தல்/வாக்குப்பதிவு நேரங்களில் எதைப்பற்றியும் யோசிக்காமல் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பியவர்களாகத்தான் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கின்றனர். அந்த அளவிற்கு மக்கள் மனதில் அரசியல்வாதிகள் தங்களுடைய வாக்குறுதிகளை மீண்டும், மீண்டும் சொல்லி பதிய வைத்து விடுகிறார்கள். அதன் மூலம் மக்களின் பழைய நினைவுகளை மறக்க வைத்து விடுகின்றனர்.

இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கும் சில வாக்குறுதிகளை அள்ளி தந்துள்ளனர். தமிழகத்தில் வலுவான இரண்டு திராவிட கட்சிகளும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்று வாக்களித்துள்ளனர்.

அ.தி.மு.க

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரைகளின்படி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஓதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

தி.மு.க

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடஓதுக்கீட்டுச் சட்டம் இயற்றுவோம் என்று கருணாநிதியும் கூறியிருக்கிறார்.

இந்த இரு திராவிட கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம்களும் இரு பிரிவுகளாக தங்களுடைய ஆதரவுகளை அளித்துள்ளனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தி.மு.க.விற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அ.தி.மு.க.விற்கும் தங்களுடைய முழு சக்தியையும் விரயம் செய்து பிரச்சாரம் செய்துள்ளனர். இதை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது இடஒதுக்கீடு தொடர்பாக ஜெயலலிதா ஆணையம் அமைத்துள்ளார். அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார், அதனால் அவருக்கு முஸ்லிம்கள் ஓட்டு போட வேண்டும் என்று பிரச்சாரம் செய்துள்ளனர். ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழும்போது அதற்கு நாங்கள் உத்தரவாதம் தர இயலாது, தருவார் என்று நம்புகிறோம், தராவிட்டால் ஜென்ம விரோதியாக கருதுவோம் என்று அறிவித்துள்ளனர். கூடுதலாக தேர்தல் நிலைப்பாடு என்பது தேர்தலோடு முடிந்தது. தேர்தல் முடிந்த பிறகும் அவர்களை பின் தொடர மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகளுக்கு யாருமே உத்தரவாதம் தர முடியாது என்பதை ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு ஆதரவு திரட்டிய முஸ்லிம்களான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் நிலைப்பாடு தேர்தலோடு முடிந்தது என்று சொன்னதை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அப்படி அவர்கள் நிறைவேற்றவில்லை என்றால் அ.தி.மு.க.விற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கும் பொழுது அவர்கள் மீது என்னென்ன வகையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதோ அவை அனைத்தும் உண்மையாகவே கருதப்படும். இன்னும் மற்ற அரசியல் கட்சிகளைப்போலவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் காட்சி அளிக்கும்.

இவர்கள் ஆதரவு செலுத்தாத தி.மு.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அவர்களுடைய நல்ல திட்டங்களை தவறானதாக விமர்சிக்கக் கூடாது. முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை யார் செய்தாலும் அதை கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். தங்களுக்கு பிடிக்காத தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரித்த தி.மு.க. கட்சியின் ஆட்சி திட்டங்களை நாம் எப்படி ஆதரிப்பது என்று கருதினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்களிடம் செல்வாக்கு இழந்து செல்லாக்காசாக ஆகிவிடும்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரின் தேர்தல் பிரச்சார மேடைகளில் கருணாநிதி இந்த முறை நிச்சயமாக இடஒதுக்கீடு தருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே சமயம் கருணாநிதி இடஒதுக்கீடு தருவார் என்பதற்கு இவர்களும் எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை. அவர்கள் கருணாநிதி மீது வைத்த நம்பிக்கைகளை விடவும் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு செய்த துரோகங்களைத்தான் அதிகமாக தேர்தல் பிரச்சாரங்களில் பட்டியலிட்டுள்ளனர். அவர்களுடைய பட்டியலை உணர்வுள்ள எந்த ஒரு முஸ்லிமும் மறுக்க முடியாது.

இவர்களும் தாங்கள் ஆதரவு தெரிவிக்காத அ.தி.மு.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தோடு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியை கை கழுவி விட வேண்டும். இல்லையேல் அமைப்பின் பெயர் கெட்டு முஸ்லிம்களிடமிருந்தும் அது தூரமாகி விடும் ஒரு நிலை உருவாகும்.

அரசியல் கட்சிகளின் மீது முஸ்லிம்களுக்கு முழு நம்பிக்கை இல்லை.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இரு அமைப்புக்களும் வெவ்வேறு திராவிட கட்சிகளை ஆதரித்தாலும் அந்த கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு இந்த இரு அமைப்பினருமே உத்தரவாதம் தரவில்லை என்பது இந்த இரு முஸ்லிம் அமைப்புக்களுக்கும் மற்ற இரு திராவிட கட்சிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை இவ்வளவுதான் என்பதை உணர்த்துகிறது. அதனால் முஸ்லிம்கள் இந்த திராவிட கட்சிகளை நம்பும்படியாக இந்த இரு அமைப்பினருமே நடந்து கொள்ளவில்லை என்பது சற்று சந்தோசமான விசயம்தான்.

பொது மக்களின் விழிப்புணர்ச்சிக்காக சமுதாயப் பனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புக்கள் தேர்தல் முடிந்து தங்களை சமுதாய பணியில் மும்முரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களையும் விழிப்புணர்ச்சி அடையச் செய்யும் வகையில் ஒரு பனி செய்ய வேண்டும். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகளை எந்த வகையில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இரு அமைப்புக்களும் இடைவிடாது பிரச்சாரம் செய்ய வேண்டும். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகளை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிறைவேற்றுவது இல்லை என்பதை ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் பதிய வைக்க வேண்டும். அந்த ஆதாரங்கள் மக்கள் மனங்களிலிருந்து சீக்கிரமே நீங்கிவிடாத வன்னம் ஆனித்தரமானதாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் அமைப்புக்களுக்கு அபாயச் சங்கு

ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்கள் ஏதேனும் ஒரு கட்சியை ஆதரித்து ஒன்றிரண்டு சீட்டு வாங்கும் நிலையை மாற்ற கருத்து வேறுபாடுகளை கலைந்து அனைவரும் யோசிக்க முன்வர வேண்டும். முஸ்லிம்களிடம் தற்பொழுது ஓரளவுக்கு போதுமான அரசியல் விழிப்புணர்ச்சி எட்டியிருக்கிறது. இருப்பினும் அது முஸ்லிம்களுக்கு பயன்தரக்கூடியதாக இல்லை. அதை முஸ்லிம்களுக்கு பயன்தரக்கூடியதாக மாற்றியமைக்க வேண்டுமானால் முஸ்லிம்களிடம் செல்வாக்காக உள்ள அனைத்து அமைப்புக்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து யோசிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்னமும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இருந்தால் சமுதாயம் அதுபோன்ற அமைப்புக்களை அலட்சியம் செய்து விடும். ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை கேட்டு, கேட்டு மக்களுக்கு காதுகள் வலிக்கிறது. அதை படித்து, படித்து கண்களும் வலிக்கிறது. அது அவர்களுடைய மனதை மிகவும் பாதிக்கிறது. எந்த அமைப்புக்களும் சரியில்லை என்ற குரல், பல குரல்களாக மெல்ல, மெல்ல வலுப்பெற்று வருகிறது. எல்லோரும் எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை மக்கள் ஏற்படுத்தவிருக்கிறார்கள். இது முஸ்லிம் அமைப்புக்களுக்கான முஸ்லிம் மக்களின் அபாய சங்காக இருக்கிறது. இதை சமுதாய அமைப்புக்கள் புரிந்து கொண்டால் சமுதாயம் சுபிட்சம் பெறும்.

வெற்றி பெற இருக்கும் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களே

முஸ்லிம்களின் ஆதரவை பெற்று சட்டமன்றத்திற்குள் புகவிருக்கும் மற்ற சமுதாயத் சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் முஸ்லிம்களின் ஆதரவை பெற்று சட்டமன்றத்திற்குள் செல்லவிருக்கும் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு ஆதரவு குரல் எழுப்ப வேண்டும். உங்கள் கட்சி உங்களுக்கு சீட்டு கொடுத்திருக்கிறதென்றால் அதை முஸ்லிம் மக்களிடம் நாங்கள் முஸ்லிம்களுக்கு இத்தனை சதவிகிதம் தேர்தலில் சீட்டு ஒதுக்கியிருக்கிறோம் என்று சொல்லி மற்ற தொகுதிகளில் வாக்கு பெற்றுள்ளனர். அதை நீங்கள் அனைவரும் மறந்துவிடக்கூடாது.

முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கும் வண்ணம் ஒரு தீர்மானம் நீங்கள் சட்டமன்றத்திற்குல் நுழைந்த அடுத்த வாரமே நிறைவேற்ற முயற்சிக்கப்படலாம். நாம் அந்த கட்சியின் சின்னத்தில் நின்று ஜெயித்தவராயிற்றே நாம் எப்படி இதை எதிர்க்க முடியும் என்று வாய்மூடி இருக்கக் கூடாது. அதுபோன்ற சமயங்களில் தங்களுடைய எதிர்ப்பை கடுமையாக காட்டிட வேண்டும். முஸ்லிம் என்று மட்டும் பாராமல் முஸ்லிமல்லாத மக்களுக்கும் அநீதி இழைக்கப்படுமேயானால் கொதித்தெழ வேண்டும். தேவையேற்படும் பட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பொருப்பை தூக்கியெறிந்துவிட்டு வெளியேற வேண்டும். அதன்மூலமாக மட்டுமே முஸ்லிம்களிடையே உங்களுடைய செல்வாக்கை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஒரு விசயத்தை நன்றாக நினைவில் நிருத்திக்கொள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளீர்கள். முஸ்லிம்கள் முன்னெப்போதைவிடவும் இப்பொழுது அரசியலில் மிகுந்த விழிப்புணர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை முஸ்லிமல்லாத மற்ற அரசியல் கட்சியினர் ஏமாற்றியது போதும். நம்ப வைத்து கழுத்தருத்தது போதும். இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என்று இழுத்தடித்தது போதும். அதே வேலையை நீங்களும் செய்து விடாதீர்கள். உங்களால் முடியாததை முடியாது என்று வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அது உங்களை பாதிக்காது. உங்கள் கட்சியைத்தான் பாதிக்கும். ஆனால் முடியாததையெல்லாம் முடியுமென்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி விடாதீர்கள். இப்பொழுது முஸ்லிம்கள் நினைவாற்றலில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

அமைப்பு சார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

தி.மு.க, அ.தி.மு.க. இந்த இரு திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றுதான் ஆட்சி அமைக்கவிருக்கிறது. நீங்கள் ஆதரித்த கட்சிகளில் ஏதோ ஒன்று நிச்சயமாக தோற்கப்போகிறது. நீங்கள் ஆதரித்த கட்சி வெற்றி பெற்றுவிட்டால் அதை முன்னிருத்தி மார் தட்டதீர்கள். பெருமை பாராட்டாதீர்கள். அதை சுட்டிக்காட்டி சகோதர முஸ்லிமிடம் வம்புக்கு நிற்காதீர்கள். வெடி, வேட்டு வெடிப்பது போன்ற செயல்களில் கண்டிப்பாக ஈடுபடாதீர்கள். நீங்கள் ஆதரித்த ஏதோ ஒரு கட்சி வெற்றி பெற்றதாக நீங்கள் பெருமையடித்தால் அதே கட்சி மற்ற சில இடங்களில் தோல்வியையும் தழுவி இருக்கும் என்பதை சற்று நினைத்துப்பார்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல் கட்சிகளில் ஜெயிக்கப்போது யாரு? என்பது மனிதர்களாகிய நம்முடைய பார்வை.

வெற்றி, தோல்விக்கு பிறகு நற்குணங்களால் ஜெயிக்கப்போவது யாரு? என்பது நம்மைப் படைத்த இறைவனுடைய பார்வை.

எல்லா வகையிலும் நாங்கள் முஸ்லிம்கள் என்பதை எல்லா விசயங்களிலும் நாம் நிரூபிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இன்ஷா அல்லாஹ் அனைவரும் நிரூபிப்போமா?

நன்றியுடன்
அறிவழகன்.

Thursday, May 04, 2006

மக்களை திசை திருப்பும் தி.மு.க.

சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் தி.மு.க.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீட்டை மேம்படுத்துவது குறித்து இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உங்கள் அன்பு சகோதரியின் அரசு உரிய ஆணைகளை பிறப்பிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் வகையில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் இன்னமும் அமலில் உள்ளதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழ்நாடு கட்டாய மதமாற்ற தடை சட்டம் 18-05-2004 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது இந்த சட்டம் அமலில் இல்லை என்பதுதான் உண்மை நிலை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
சென்னை திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பதர் சயீத் மற்றும் சேப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருமான தாவூத் மியான்கான் ஆகியோரை ஆதரித்து பேசியபொழுது ஜெயலலிதா மேற்கண்டவாறு சொன்னார்.

Wednesday, May 03, 2006

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்..

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்..
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் எம்.பஷீர் அஹமது அவர்கள் வாணியம்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்ததிலிருந்து..

மீண்டும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு மேம்பாட்டு கமிஷன் பரிந்துரையை ஏற்று, சிறுபான்மை மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிப்போம் என தேர்தல் பிரச்சாரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருணாநிதியின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் போலியானவை. இதனை தமிழக மக்களும், சிறுபான்மை மக்களும் நம்பமாட்டார்கள். பலமுறை கருணாநிதியிடம் ஏமாந்த சிறுபான்மை மக்கள் இந்த முறை அவரை ஏமாற்ற தயாராகி விட்டார்கள்.

நன்றி - தினத்தந்தி.

Saturday, April 29, 2006

"பொடா"வை கொண்டு வந்தவர் கருணாநிதி!

இஸ்லாமியர்களை அடக்குவதற்காக பொடா சட்டத்தை முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதி
திருமாவளவன்

சிதம்பரம், ஏப்.29: மத்தியில் ஆட்சி நடத்திய பா.ஜ.க.வை திருப்திபடுத்தவும் இஸ்லாமியர்களை அடக்குவதற்காகவும் முதன் முதலில் பொடா சட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் எனக்கு இங்குள்ள ஈஸ்லாமிய மக்கள் வாக்களித்து அதிக வாக்குகளை பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பாக திகழ்கிறது. இஸ்லாமிய மக்கள் நீண்ட நெடுங்காலமாக திமுகவை ஆதரித்து வந்தனர். 4 முறை முதல்வராகவும், ஏறத்தாழ 16 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த கருணாநிதி இஸ்லாமிய மக்களுக்கு என்ன செய்தார்?

தற்போது வெற்றிபெற்றால் இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிப்பேன் ஏன்கிறார். காயிதேமில்லத் காலத்திலிருந்து இந்த இடஓதுக்கீடு கோரிக்கை இருந்து வருகிறது. ஏன் அப்போது கருணாநிதி நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய ஆணையத்தை அமைத்தார். மேலும் இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார்.

முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு வழங்குவதற்கும், பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் பேசி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு வழங்குவது குறித்து மதரீதியானது ஏன்பதால் நமது சட்டத்தில் இடமில்லை. அப்படி அந்த பெயரில் அமைத்தால் ஒரு வழக்கு மூலம் அதற்கு தடைபெற்று விடலாம். எனவே இக்கோரிக்கையை சிக்கலின்றி நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை அமைத்துள்ளார்.
தற்போது இஸ்லாமியர், தலித் ஓற்றுமை அரசுக்கு தேவை. இஸ்லாமியர்கள் இடஓதுக்கீடு கோரிக்கை குறித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து போராடும். ராணுவத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஓதுக்கீடு கிடையாது. அதுபோன்று முஸ்லிம்களுக்கும் இடஓதுக்கீடு கிடையாது. இதுபோன்று அனைத்து தரப்பிலும் பிரதிநிதித்துவம் கோரி போராட வேண்டும். இஸ்லாமியர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியவர் கருணாநிதி. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் கருணாநிதியின் ஆட்சியில் போலீஸார் இஸ்லாமிய மக்களை வேட்டையாடிதை யாரும் மறக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிரானவர் கருணாநிதி என்றார் தொல்.திருமாவளவன்.

நன்றி - தினமணி

Wednesday, April 26, 2006

கருணாநிதி, ஜெயலலிதா ஓர் ஒப்பீடு!

கருணாநிதி, ஜெயலலிதா அணுகுமுறை ஓர் ஒப்பீடு!
? கருணாநிதி, ஜெயலலிதா அணுகுமுறையை ஒப்பிடுக!

! கருணாநிதியை யார் வேண்டுமென்றாலும் எந்த சூழ்நிலையிலும் சந்திக்கலாம். அவரோடு எளிதில் ஒரு பிரச்சினையைப் பற்றி தொலைபேசியில் கூட பேசிவிட முடியும். மற்றவர்கள் கூறும் கருத்தை செயல்படுத்துவாரோ இல்லையோ, குறைந்த பட்சம் செவிமடுப்பார்.

ஆனால் ஜெயலலிதா அப்படி அல்ல. தன்னை சர்வாதிகாரியாக காட்டிக் கொள்பவர். அவரை அமைச்சர்களால் கூட எளிதில் சந்திக்க முடியாது.

தேர்தல் நடைமுறைக்கு வந்தால் மட்டும் எல்லோரையும் சந்திப்பார். தேன் ஒழுக பேசுவார். தேர்தல் முடிந்ததும் மற்ற நேரஙகளில் அவர் எப்படி நடப்பார் என்பதும், வாக்குறுதிகளை எப்படி மீறுவார் என்பதும், அதை விமர்சித்தால் என்ன செய்வார் என்பதும் நாடறிந்த செய்திகளாகும்.
நன்றி - TMMK ONLINE

ஆக்டோபஸ் காலில் சிக்கிய கருணாநிதி!

கருணாநிதி ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி!! பாகம் - 02

மேற்கண்ட தலைப்பில் பதிவு செய்யப்பட்ட கட்டுரையின் தொடர்ச்சி இது. கருணாநிதி முஸ்லிம் சமுதாயத்திற்கு செய்த மறைமுகமான அநீதிகளில் மிகச் சிலவற்றை முந்தைய பதிவில் பதிந்திருந்தேன், அதன் தொடர்ச்சியான இப்பதிவில் இன்னும் சிலவற்றை பதிவு செய்கிறேன்.

23-01-1999 - ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்சும், அவரது பிள்ளைகளும் அவர்களது வாகனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் போது பயங்கரவாத கூட்டமான பஜ்ரங் தளத்தை சேர்ந்த தாராசிங் என்பவன் அவர்கள் அனைவரையும் தீயிட்டு கொளுத்தி கொன்றான். அப்பொழுது கருணாநிதி அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இச்செயல் மனித சமுதாயத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இது நினைத்து, நினைத்து வேதனைப்படக் கூடிய ஒரு செயல். அக்கொலைகளை செய்தவர்கள் கல்நெஞ்சம் கொண்ட கொடியவர்கள். (முரசொலி - 25-01-1999)

கருணாநிதியின் இந்த அறிக்கை வரும்போது அவர் பா.ஜ.க. கூட்டணியில் இல்லை என்பதையும், அந்த அறிக்கையில் ஒரிசாவில் ஆட்சியில் இருந்த கட்சி பற்றி கருணாநிதி ஒன்றுமே சொல்லவில்லை என்பதையும் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

29-08-1999 - அதே ஒரிசாவில் ஷேக் ரஹ்மான் என்ற முஸ்லிம் வியாபாரி அதே பயங்கரவாத கூட்டமான பஜ்ரங் தளத்தை சேர்ந்த தாராசிங் என்பவனால் வெட்டப்பட்டு பின்பு தீயிட்டு கொளுத்தப்பட்டார்.

வெளிநாட்டு பாதிரியார் கொலை செய்யப்பட்டதற்கு அறிக்கை வெளியிட்ட கருணாநிதி முஸ்லிம் வியாபாரியின் கொலைக்கு அறிக்கை வெளியிடவில்லை. மாறாக அல்லது அறிக்கைக்கு பதிலாக முரசொலியில் ஒரு செய்தி வந்தது.

சோனியாவின் ஆளும் காங்கிரஸ் மீது மக்கள் குமுறல், சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரிசாவில் தொடரும் வன்முறைகள்.

இந்திரா காங்கிரஸ் ஆளுகின்ற ஒரிசா மாநிலத்தில் இஸ்லாமிய வியாபாரி ஷேக் ரஹ்மான் எரித்துக் கொலை செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய பாதிரியாரையும், அவரது மகன்களையும் கொலை செய்த தாராசிங் என்பவன்தான் இந்த கொலையையும் செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொடிய கொலைக் குற்றவாளி மீது அந்த மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். (முரசொலி - 31-08-1999)

ஆஸ்திரேலிய பாதிரியார் கொலை செய்யப்பட்ட போது கருணாநிதி வெளியிட்ட அறிக்கையிலே எந்த கட்சியின் ஆட்சி ஒரிசா மாநிலத்தில் நடைபெறுகிறது என்று குறிப்பிடப்படவில்லை. முஸ்லிம் வியாபாரி கொலை செய்யப்பட்டபோது அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கட்சியை குறிப்பிட்டு முரசொலியிலே செய்தி வெளியிடப்படுகிறது.

காரணம் என்னவென்று தெரியுமா? அப்பொழுது முஸ்லிம்களின் பாதுகாவலர் திரு.கருணாநிதி அவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கிறார். அநியாயாம் செய்த கொடியவர்களை கண்டிக்க வேண்டிய முறையில் கண்டிக்காமல் அதிலும் அரசியல் செய்து முஸ்லிம்களை காங்கிரஸிற்கு எதிராக திருப்பி விடும் வகையில் முரசொலியில் செய்தி வருகிறது. மனித நேயத்தில் நாட்டம் கொண்ட உடன் பிறப்புக்களே, இதில் கருணாநிதியின் அரசியல் ராஜதந்திரத்தின் ரகசியம் அப்பட்டமாக பிரகாசிக்கிறதல்லவா?

இப்பொழுது கருணாநிதி அவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கிறார் என்பதையும் ஒருமுறை மனதில் நிறுத்திக் கொள்வோம்.

02-09-1999 - அதே ஒரிசா மாநிலத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற பாதிரியார் அதே கும்பலால் அம்பு எறிந்து கொல்லப்படுகிறார்.

இப்பொழுது கருணாநிதி அவர்களிடமிருந்து அறிக்கை வருகிறது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிற ஒரிசா மாநிலத்தில் ஏற்கனவே ஆஸ்திரேலியப் பாதிரியாரும், அவரது மகன்களும் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இப்பொழுது தமிழ்நாட்டை சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் அருள்தாஸ் அவர்கள் ஒரிசாவில் கொலையுண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குறியதாகும். (சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ் - பக்கம் 43)

ஒரிசாவில் வெவ்வேறு கொலைகள் மூன்று காலங்களில் நிகழ்த்தப்படுகிறது. முதல் கொலையை கண்டித்து அறிக்கை வெளியிடும் போது அதில் அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிப்பற்றி பேசப்படவில்லை. குறிப்பிடப்படவில்லை. மற்ற இரண்டு கொலைகளில் சோனியாவின் ஆளும் காங்கிரஸ், மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சி என்று பெயர் குறிப்பிடப்படுகிறது.

இப்பொழுது நாம் நினைவில் நிறுத்தி உள்ளதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை எதிர்க்கும் போது அதை கொள்கை ரீதியாக சித்தரிப்பது.

இச்செயல் மனித சமுதாயத்திற்கே இழுக்கு,

நினைக்க, நினைக்க வேதனை,

கொலைகளை செய்தவர்கள் கல்நெஞ்சம் கொண்ட கொடியவர்கள்

அதே கட்சியை ஆதரிக்கும் போது கண்டிக்க வேண்டிய முறையில் கண்டிக்காமல் அம்மாநில அரசை நடத்தும் கட்சியோடு தொடர்படுத்தி செய்தியை திரிப்பது. அதில் சிறப்பான ராஜதந்திர அரசியல் செய்வது. அய்யகோ! இதுவன்றோ தலைசிறந்த அரசியல் ராஜதந்திரம். இதையெல்லாம் நன்கு உணர்ந்துவிட்ட முஸ்லிம்கள் கருணாநிதியின் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நம்புவார்கள்? எப்படி முடியும்?

கருணாநிதியின் ராஜதந்திரத்திற்கு மற்றுமோர் மணிமகுடம் இதோ..
1998 - கோவையில் நடந்த தேர்தல் பிராச்சாரத்தில் கருணாநிதி பேசுகிறார்..
ஆக்டோபஸ் என்ற ஒரு பிராணியைப் படங்களிலே பார்த்திருப்பீர்கள். பயங்கரமான பிராணி அது. அதற்குப் பல கால்கள் உண்டு. எந்தக் காலில் சிக்கினாலும், சுருட்டி வாயிலே போட்டுக் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்தது. ஆக்டோபசுக்கும், இந்தப் பா.ஜ.க.வுக்கும் வேறுபாடு இல்லை. (முரசொலி - 26-02-1998)

பா.ஜ.க.வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட கருணாநிதி அதை ஆக்டோபஸ் என்று வர்ணிக்கிறார். இப்படியெல்லாம் பா.ஜ.க.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப்பட்டு சேகரித்த ஓட்டுக்களால் பாராளுமன்றத்திற்கு ஒரு கணிசமான உறுப்பினர்களை அனுப்பியும் வைத்தார். அதே உறுப்பினர்களை கொண்டு பா.ஜ.க. அரசை காப்பாற்றவும் செய்தார். அதாவது பா.ஜ.க.வை எதிர்த்து அளிக்கப்பட்ட வாக்குகளை பயன்படுத்தி பா.ஜ.க.வை ஆதரித்தார். அதை கவிழ்ந்து விடாமல் காப்பாற்றினார். அதனுடன் கூடி குலாவினார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு அதே கோவையிலே கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களுக்கு இதோ பேட்டி கொடுக்கிறார்.

செய்தியாளர்: ஆக்டோபஸ் காலில் சிக்கிக் கொண்டதாக முன்பு சொன்னீர்களே?

கருணாநிதி: 'ஆக்டோபசுக்குக் கால்கள் கிடையாது'

கருணாநிதி என்ற அரசியல் ராஜதந்திரியின் தந்திரமான பேச்சை முஸ்லிம்கள் உன்னிப்பாக கவனித்து நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் நினைத்தால் ஆக்டோபசுக்கு கால், கை, மூக்கு, வாய் எல்லாம் இருப்பதாக கதை விடுவார். அவர் நினைத்தால் அதெல்லாம் கிடையாது என்று தந்திரமாகவும் நழுவுவார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறச் செய்யுங்கள், உங்களுக்கு இடஒதுக்கீடு தருகிறேன் என்று முஸ்லிம்களிடம் வாக்களித்தார். வெற்றியும் பெற்றார். வெற்றி பெற்ற அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின்போது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெறச் செய்யுங்கள், உங்களுக்கு இடஒதுக்கீடு தருகிறேன் என்று சொன்னார்.

234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெற முடியுமா? தி.மு.க.வை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு போட்ட ஓட்டுக்களை செல்லாத ஓட்டு என்று அறிவித்தால்தான் 234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெற முடியும். இதன்மூலம் என்ன தெரிகிறது? கருணாநிதியுடைய பார்வையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது எட்டாக்கனியே.

நடைபெறவிருக்கின்ற சட்ட மன்ற தேர்தலில் தனிமெஜாரிட்டி கிடைத்து ஒருவேளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் அது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி பேசுமா என்பதில் எந்தத் தெளிவும் இல்லை. அப்படி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த கருணாநிதியிடம் முஸ்லிம் தலைவர்களோ அல்லது செய்தியாளர்களோ

'வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதாக வாக்களித்தீர்களே'
என்று ஒரு கேள்வியை கேட்டால்

'சற்று திருத்திக்கொள்ளுங்கள், 234 தொகுதியிலும் வெற்றி பெற்றால் கொடுப்பதாகத்தான் கூறினேன்'
என்று கருணாநிதி சொல்லமாட்டார் என்பது என்ன நிச்சயம்? கடந்த கால வரலாறுகள் அவர் அப்படி சொல்வார் என்பதைத்தான் உணர்த்துகிறது.

தேனைப்போல இனிக்க, இனிக்க பேசியதற்காக மட்டுமே கருணாநிதிக்கு பலமுறை முதல்வர் பதவியை பரிசாக முஸ்லிம்கள் நாம் கொடுத்துவிட்டோம். முஸ்லிம்களுக்கு அவர் செய்த அநீதிக்கு பரிசாக இந்தத் தேர்தலில் அவருக்கு தோல்வியை பரிசாக கொடுத்து வரலாற்றில் சிறப்பிடம் பிடிப்போம். பிற அரசியல் கட்சிகளுக்கு அது படிப்பினையாக அமையட்டும்.

நன்றியுடன்,
அறிவழகன்
குறிப்பு: இந்த கட்டுரையிலும், இதற்கு முந்திய கட்டுரையிலும் உள்ள பெரும்பாலான குறிப்புகள் யாவும் திராவிடர் கழக வெளியீடான "சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ்" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

பிரதிநிதித்துவத்தை பறித்த கருணாநிதி!!

சேப்பாக்கம் : முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பறித்துக் கொண்ட கருணாநிதி

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான சேப்பாக்கம், முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதியகும். குறைந்த வாக்காளர் எண்ணிக்கையை கொண்டுள்ள இந்த தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் எளிதாக வெற்றி பெற்று விட முடியும்.

சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க விரும்பும் அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி முஸ்லிம் வேட்பாளரை சேப்பாக்கத்தில் நிறுத்துவது மரபாகும்.

1977, 1980, 1984 என 3 முறை திமுக சார்பில் ரகுமான்கானும், 1989ல் திமுக கூட்டணியில் இடம் பெற்ற எம். அப்துல் லத்தீப்பும், 1991ல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜீனத் சர்புதீனும் வெற்றி பெற்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தின் நண்பனாக காட்டிக் கொள்ளும் திமுகவுக்கு தொடர்ந்து வெற்றி வாய்ப்பை அளிக்கும் இந்தத் தொகுதியில் முஸ்லிம் ஒருவரே வெற்றி பெற்று வந்துள்ளார்.

இந்த நிலைக்கு மாறாக முஸ்லிம் சட்டமன்ற பிரதிநிதித்துவத்தைத் தடுத்து நிறுத்தும் வஞ்சக திட்டத்துடன் 1996 தேர்தலின்போது முதன் முதலாக திமுக தலைவர் கருணாநிதி இந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.

கருணாநிதியின் வஞ்சக குணத்தை அறியாத முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். அதனைத் தொடர்ந்து 2001ல் தேர்தலின் போது அங்கு மறுபடியும் கருணாநிதியே போட்டியிட்டார். அப்போதும் அவரை முஸ்லிம்கள் வெற்றி பெறச் செய்தனர்.

இப்போது மறுபடியும் 2006 தேர்தலிலும் கருணாநிதி சேப்பாக்கத் தொகுதியிலேயே நிற்க முடிவெடுத்துள்ளார். ஆனால் இந்த முறை கலைஞரின் வஞ்சகத்திட்டத்தை அறிந்து முஸ்லிம்கள் விழிப்புடன் இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கடினமே.

எந்த முஸ்லிம் சமுதாயம் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றிச் சிகரத்தில் வைத்து கண்டு களித்ததோ அந்த சமுதாயத்துக்கு அவர் தொடர்ந்து இழைத்த அநீதிகளால், வஞ்சகத்தால் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியவர்களாய் சேப்பாக்கம் வாக்காளர்கள் உள்ளனர்.

நன்றி : உணர்வு 10:32

தமிழக அரசியலில் ராஜதந்திரி!!

கருணாநிதி ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி!!

இந்த தலைப்பிற்கு முழுத் தகுதி வாய்ந்தவர் கருணாநிதி மட்டுமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் தமிழக அரசியல் வரலாற்றில் தனது வாய்ச்சொல் திறமையால் சிறப்பாக கோலோச்சியவர் அவரே.

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முதன் முதலாக சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் உளப்பூர்வமாக பங்கேற்று தமிழகத்திலிருந்து முதன்முதலாக அதற்கு சாமரம் வீசியதும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான். அப்போதைய காலகட்டத்தில் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி அந்த கூட்டணியை சகட்டு மேனிக்கு சாடி விமர்சனம் செய்தார். பத்திரிக்கைகளில் தாரளமான அறிக்கைகளை அள்ளி தெளித்துக் கொண்டும் இருந்தார்.

முரசொலியில் வந்த ஒரு செய்தியிலே..

...பொதுமக்களை ஏமாற்றுவதற்கு வாஜ்பேயி என்கிற முகமூடி அணிவித்து பா.ஜ.க.வை மக்கள் உள்ளத்தில் பதிய வைத்து அறிமுகப்படுத்த எண்ணுகிறார்கள். ...அந்த முகமூடியை அகற்றிவிட்டுப் பார்த்தால் அங்கே என்ன தெரியும் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். என்ற காட்டுமிராண்டித் தனமான வன்முறைக் கும்பல் தெரியும். இந்த முகமூடியை விலக்கிவிட்டுப் பார்த்தால் இந்து முன்னணி என்கிற வக்கிரமான வன்முறைக் கும்பல் அங்கே தெரியும். அந்த முகமூடிகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் பஜ்ரங் தளம் என்ற பயங்கரவாத கூட்டத்தின் உருவம் தெரியும். விசுவ இந்து பரிஷத் என்கிற வன்முறையாளர்களின் கூட்டம் அங்கே தெரியும். (முரசொலி - 26-2-1998)

சங்க்பரிவாரத்தினரை கருணாநிதி அவர்கள் இப்படி அபிசேகம் செய்யும் போது அவர் பா.ஜ.க.விற்கு எதிரணியில் இருந்தார் என்பதை இந்த இடத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

06-03-1999 அன்று சென்னை கேரள சமாஜத்தில் ஜி.கே.மூப்பனார், ஆர்.நல்லகண்ணு, என்.வரதராஜன், ஜி.ஏ.வடிவேலு போன்றோர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க.வையும், அதன் ஆட்சியையும் விமர்சித்து நீண்டதொரு உரை நிகழ்த்தினார் கருணாநிதி. அந்த நீண்ட உரையிலே..

அவர்கள் (பா.ஜ.க.வினர்) மனிதாபிமானத்தை மதிக்கக் கூடியவர்கள் இல்லை. மனித நேயத்தை விரும்பக் கூடியவர்கள் இல்லை. எல்லா மதமும் ஒன்றுதான் என்று மத நல்லிணக்கத்தை போற்றக்கூடியவர்கள் இல்லை. நீதியை, நெறியை, நேர்மையை என்றைக்கும் மதிக்கக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்களுடைய கையிலே இன்றைக்கு இருக்கின்ற ஆட்சிப் பொருப்பும் அந்த ஆட்சிப் பொருப்புக்கு ஆதரவாகச் செயல்படுகின்ற சில பரிவாரங்கள், சில கணங்களுடைய அக்கிரம அடாவடிச் சேட்டைகளும் இந்தியாவிற்கு ஒரு தலைகுனிவை அகில உலக அரங்கிலே இன்றைக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த ஓராண்டு பி.ஜே.பி. ஆட்சியிலே சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டாங்களை பட்டியலிடுகிறேன் என்று சொன்ன கருணாநிதி 1998 ஏப்ரல் மாதத்தில் குஜராத்தில் பரோடா என்னும் இடத்தில் கிறித்தவ கூட்டத்தின் மீது நடைபெற்ற தாக்குதலிலிருந்து தொடங்கி 1999 ஜனவரி மாதத்தில் ஒரிசா மாநிலத்தில் சொங்காட் என்னும் இடத்தின் அருகே உள்ள தோஸ்வாடா என்ற கிராமத்தில் இரண்டு கிறித்தவ ஜெபகூடங்களை இடித்து தரை மட்டமாக்கியது வரை பட்டியலிட்டு பி.ஜே.பி. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்க்பரிவார கும்பலின் 20 வன்முறை வெறியாட்டங்களை அந்த உரையிலே குறிப்பிட்டார். (முரசொலி 7.3.1999)

இவர் இத்தனை விசயங்களை பட்டியலிடும் போது பா.ஜ.க.விற்கு எதிரணியில் இருந்தார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த இடத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பா.ஜ.க.வுடனான தேர்தல் கூட்டணி குறித்து முரசொலியில் முழங்கிய மற்றொரு செய்தி...

ஜெயலலிதா, பா.ஜ.க. என்ற ஒரு பாம்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் அவிழ்த்து விடுகிறார். ஜாக்கிரதை, ஜாக்கிரதை, நச்சுப் பாம்பு, தமிழ்நாட்டிலே இதுவரை நுழையாத பாம்பு, மதவெறி பாம்பு, இந்த பாம்பை அடித்து நொறுக்குங்கள், நொறுக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். (முரசொலி - 16-02-1999)

இப்பொழுதும் அவர் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரணியில் இருந்தார் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி சங்க்பரிவாரத்தினரைப் பற்றி பச்சை, பச்சையாக, மட்டை இரண்டு கீற்றாக அக்குவேர் ஆணிவேராக அலசி எடுத்த கருணாநிதி, பி.ஜே.பி.யுடனான கூட்டணியை ஜெயலலிதா முறித்துக் கொண்டவுடன் பாய்ந்து போய் பிடித்து பி.ஜே.பி. ஆட்சிக்கு முட்டு கொடுத்தார். அது கீழே விழாமல் தாங்கிப் பிடித்தார், தூக்கி நிறுத்தினார். அதற்கு முன்பு பி.ஜே.பி. தீண்டத்தகாத கட்சி அல்ல என்ற முஸ்திபுகளை அழகாக முழங்கினார். அவர் ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி ஆயிற்றே.

திராவிட கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க. பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் நடைபாவாடை கட்டி வருக, வருக என வரவேற்கிறது என்று விமர்சித்த கருணாநிதி அதே பி.ஜே.பி.க்கு நடைபாவாடை கட்டி வருக, வருக என தமிழகத்திற்கு தோரணம் கட்டி வரவேற்றார்.

பி.ஜே.பி. ஆட்சி தொடர்ந்தால் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் இல்லை, அண்ணா இல்லை, அவர்கள் பிறந்த பூமி இது இல்லை என்ற ஒரு சூழ்நிலை உறுவாகும் என்று அண்ணா அறிவாலயத்திலே முழங்கிய கருணாநிதி அதே பி.ஜே.பி. ஆட்சி தொடர அரும்பாடு பட்டார்.

பி.ஜே.பி. ஆட்சி தொடர்ந்தால், பாபர் மசூதியை இடிப்பதற்கு பண்டாரக் கூட்டம், பரதேசிக் கூட்டம் கையிலே வேலாயும், சூலாயுதம், கோடாரிகள் இவைகளையெல்லாம் ஏந்திக் கொண்டு சென்ற அந்த காட்சி போல் தமிழ்நாட்டிலும் இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நம்முடைய சந்ததியினர், நம்முடைய பிள்ளைக்குட்டிகள் பேரன், பேத்திகள் எல்லாம் அந்த கண்ணறாவிக் காட்சியை காணக்கூடிய நிலை தமிழ்நாட்டிலும் அன்றாட நிகழ்ச்சிகளாக ஆகிவிடக் கூடும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கவலையோடு உறுக்கமாக பேசினார். (முரசொலி - 28-01-1998) அதே கருணாநிதி பி.ஜே.பி.யோடு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்.

சங்க்பரிவார கும்பலின் அராஜகங்களை அன்று பட்டியலிட்ட கருணாநிதி பி.ஜே.பி.யுடனான கூட்டணி ஏற்பட்டவுடன் அதே சங்க்பரிவார கும்பலின் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்-ஐ சமுதாய அமைப்பு என்று நற்சான்றிதழ் வழங்கினார்.

நிருபர்கள் வாஜ்பேயி, ஆர்.எஸ்.எஸ் ஒரு சமுதாய இயக்கம் என்று சொல்லியிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று கேட்டதற்கு..

ஏற்றுக் கொள்கிறேன். திராவிடர் கழகம் இங்கே சமுதாய இயக்கமாக இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் திராவிடர் கழகத்திற்கும் கொள்கைகளிலே ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. அது வேறு விசயம். ஆனால், அவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள், இவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இரண்டும் ஒன்றல்ல. நான் திராவிடர் கழகத்திலிருந்து வந்தவன் என்று கருணாநிதி திருவாய் மலர்ந்தார். (முரசொலி - 9-2-2000)

பா.ஜ.க.வுடன் தேர்தலை சந்திக்கவிருக்கும் தி.மு.க. அதன் தொண்டர்களுக்கு சில அறிவுரைகளை அண்ணா அறிவாலயத்தில் வைத்து போதிக்கிறது. என்ன போதித்தது, எப்படி போதித்தது என்பதை பார்ப்போம்.

சிறுபான்மை மக்களிடம் பா.ஜ.க.பற்றி ஒரு சந்தேகத்தை ஒரு சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்கு ஈடு கொடுத்துவிட்டு, அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உண்டு. (முரசொலி - 23-06-1999)

எப்பேர்பட்டவர்களுக்கு கருணாநிதி அவர்கள் சமுதாய அமைப்பினர் என்ற நற்சான்றிதழும், சிறுபான்மை மக்களிடம் பா.ஜ.க.பற்றி ஒரு சிலர் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்று எதுவுமே தெரியாதது போலும் நடித்திருக்கிறார் என்பதை அவருடைய பழைய வாக்குமூலங்களை எடுத்துப் போட்டு ஒருமுறை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் - காட்டுமிராண்டித் தனமான வன்முறைக் கும்பல்,

இந்து முன்னணி - வக்கிரமான வன்முறைக் கும்பல்,

பஜ்ரங் தளம் - பயங்கரவாத கூட்டம்,

விசுவ இந்து பரிஷத் - வன்முறையாளர்களின் கூட்டம்.

அவர்கள் அனைவரும்

மனிதாபிமானத்தை மதிக்காதவர்கள்,

நீதியை, நெறியை என்றைக்கும் மதிக்காதவர்கள்,

மத அடிப்படைவாத அமைப்பினர்,

மத தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தோர்,

விஷமிகள்,

வேலாயும், சூலாயுதம், கோடாரிகள் இவைகளையெல்லாம்

ஏந்திக் கொண்டு சென்ற

பண்டாரக் கூட்டம், பரதேசிக் கூட்டம்,

என்று கருணாநிதி அவர்களாலேயே அபிசேகமும், ஆராதனையும் செய்து பட்டியலிடப்பட்ட சங்க்பரிவார அமைப்பினர் பிற்காலங்களில் அவர்களுடன் கூட்டணி பூண்டவுடன் எப்படி சமுதாய அமைப்பினராக மாறினர்?

அவர்களைப் பற்றி சிறுபான்மை இன மக்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் சாட்சாத் திரு.கருணாநிதி அன்றோ?

கருணாநிதியின் மேற்கண்ட பட்டியலில் உள்ள செயல்பாடுகள் தான் ஒரு சமுதாய அமைப்பிற்கான இலக்கணமாக இருந்தால் தி.மு.க. அந்த சமுதாயப் பனியை பிற்காலங்களில் செய்யும் என்று பொருள் கொள்வதா?

நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்ததிலாவது தெளிவு இருக்கிறதா என்றால் அதிலும் குழப்பமே மிச்சம்.

முதலில் திராவிடர் கழகம் இங்கே சமுதாய இயக்கமாக இருக்கிறது என்கிறார். பிறகு அவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார். கருணாநிதியின் இந்த முரண்பாடான போக்கை கண்டித்து அவர் எந்த இயக்கத்திலிந்து வந்தாரோ அந்த திராவிடர் கழகத்தினரே தங்களுடைய விடுதலை என்னும் பத்திரிக்கையில் சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளியிட்டு கருணாநிதியை கஞ்சி காய்ச்சி காவடி எடுத்தனர். அதை புத்தக வடிவிலும் வெளியிட்டுள்ளனர். அவர்களும் தற்பொழுது கருணாநிதியின் கூட்டணியில் உள்ளனர் என்பதை இந்த இடத்தில் சற்று ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

திராவிடன், தமிழ் மொழி, தமிழன் என்று சொல்லிச், சொல்லியே கருணாநிதி தனது குடும்ப நலன்களை பெருக்கிக் கொண்டாரே தவிர மக்கள் நலனில் அக்கறை காட்டிடவில்லை. குறிப்பாக முஸ்லிம்களுடைய நலனில் அவர் என்றுமே அக்கறை காட்டியது இல்லை. தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை கூட முழங்க முடியாமல் கட்டுண்டு போனது தான் அவருக்கு மிச்சமானது.

ஆகவே, கருணாநிதியின் ஒவ்வோர் சொல்லும், எழுத்தும் நம்பகமானதாக முஸ்லிம் சமுதாயம் இனியும் கருதாமல் இருப்பதுதான் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்று. பி.ஜே.பி.யை ஆதரித்து தனது சந்ததிகளுக்கு, பேரன், பேத்திகளுக்கு கருணாநிதி செய்த துரோகங்களை போல் முஸ்லிம்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு துரோகம் இழைத்து விடமால் கவனமான முடிவு எடுக்கும் சரியான நேரம் இது.

கருணாநிதியுடைய எஞ்சியிருக்கும் வாழ்நாளின் இறுதிக்குள் அவரை ஒருமுறையேனும் தேர்தலில் தோற்கடிப்பது முஸ்லிம்களின் சமுதாய கடமையாக கருதினால் அது தவறுமல்ல, மிகையுமல்ல.

இன்சா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இந்த கட்டுரையை தொடர்கிறேன்.

நன்றியுடன்
அறிவழகன்.